|

கோத்ரா வழக்கு: உத்தரவைத் திரும்பப்பெற்றது உச்ச நீதிமன்றம்


புது தில்லி, மார்ச் 23: குஜராத் கலவரங்கள் தொடர்பாக விசாரித்து வரும் நானாவதி கமிஷனை, முதல்வர் நரேந்திர மோடியையும் அழைத்து விசாரிக்குமாறு அறிவுறுத்தக் கோரும் மனு மீதான விசாரணையின்போது, நானாவதி கமிஷனுக்கும், குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி மார்ச் 19-ம் தேதி அளித்த உத்தரவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக கூறி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.நீதிபதிகள் டி.கே. ஜெயின் மற்றும் ஏ.கே. தேவ் அடங்கிய பெஞ்ச், "2012 மார்ச் 19-ம் தேதி அளித்த உத்தரவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக' வெள்ளிக்கிழமை அறிவித்தது. இந்த மனு தொடர்பாக திங்கள்கிழமை புதிதாக விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தது.
கோத்ரா கலவரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வேறு இரண்டு மனுக்களோடு இந்த மனுவும் சம்பந்தப்பட்டதாக தங்களிடம் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டதால் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் நீதிமன்றம் விளக்கமளித்தது.
ஜன சங்கர்ஷ் மஞ்ச் (ஜே.எஸ்.எம்.) என்ற தொண்டு நிறுவனம் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தது. நானாவதி கமிஷன் முதல்வரை அழைத்து விசாரிக்க வேண்டும் என்ற ஜே.எஸ்.எம்.மின் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நானாவதி கமிஷனுக்கும், குஜராத் அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி உச்ச நீதிமன்றம் மார்ச் 19-ம் தேதி உத்தரவிட்டது.
கலவரத்தை விசாரித்துவரும் கமிஷனின் விசாரணை வரம்புக்குள் முதல்வரின் செயல்பாடுகளும் வருவதால் அவரையும் விசாரிக்க வேண்டும் என்று ஜே.எஸ்.எம். கோரியுள்ளது. கோத்ரா ரயில் எரிப்புக்கு பின்பு நிகழ்ந்த கலவரங்கள் குறித்து விசாரிக்க 2002-ல் நானாவதி கமிஷன் அமைக்கப்பட்டது. 2004-ல், கலவரத்தில் முதல்வரின் பங்கு என்ன என்பதையும் விசாரிக்கும் அதிகாரம் கமிஷனின் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரப்பட்டது.
2009-ல், முதல்வர் மோடியையும், மேலும் 5 பேரையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரி ஜே.எஸ்.எம். தாக்கல் செய்த மனுவை நானாவதி கமிஷன் தள்ளுபடி செய்தது. எனினும் உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு, கலவரம் தொடர்பாக 2010-ம் ஆண்டு முதல்வர் மோடியை பத்துமணி நேரத்துக்கும் அதிகமாக விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
2009-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் ஜே.எஸ்.எம். மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த நீதிபதி கே.எஸ். ஜாவேரி அந்த மனுவை தள்ளுபடி செய்தார். பின்பு 2010-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சில் ஜே.எஸ்.எம். அமைப்பு மேல்முறையீடு செய்தது. கோத்ரா ரயில் எரிப்பு, கலவரங்கள் தொடர்பான ஆதாரங்களை திரட்ட முதல்வரையும், மற்றவர்களையும் விசாரிக்க வேண்டும் என ஜே.எஸ்.எம். தனது மனுவில் தெரிவித்திருந்தது.
அதை எதிர்த்த மாநில அரசு, "விசாரணை ஆணைய சட்டத்தின்படி, யாரையாவது விசாரிக்க வேண்டும் என்று மூன்றாம் தரப்புக் கோர முடியாது என்றும், அது குறித்து விசாரணைக் கமிஷன்தான் முடிவெடுக்க வேண்டும்' என்று தெரிவித்தது.

பதிவு செய்தவர் ah kdnl on 3:59 PM. தலைப்பு , , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்